Tuesday, June 24, 2008

ரசித்திருக்கிறேன்...

உன் அகன்ற விழிப்பார்வை
என்னைத் தொட்டுச் செல்கையில்
ஏதோ ஒன்றை சொல்லத்துடிக்கும்
உன் உதடுகள்...
நான் ரசித்திருக்கிறேன்!!


உன் கூந்தல் மலர்களை
மாலையில் எடுத்து வீசுகையில்..
கைவளை ஓசையில் - என்
கவனம் சிதைத்து நீ சிரிக்கையில்
நான் ரசித்திருக்கிறேன்!

சங்குக்கழுத்துயர்த்தி
வான்புறா பறக்கையில்
நீ கைதட்டி ரசித்ததை
நான் ரசித்திருக்கிறேன்!!!

அக்கம்பக்கம் பார்த்து நாம்
சைகை பாஷை பேசுகையில்
நான் சொல்வது புரியாமல்
ஒருவிரலுயர்த்தி குதிப்பாயே..
நான் ரசித்திருக்கிறேன்!!!

நாம் சைகை பாஷை பேசுகையில்
நடுவில் வந்த உன் அம்மாவுக்காக
திருக்குறள் ஒப்பித்தாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

புதுத்துணி அணிந்து நான்
கருத்தினைக் கேட்கையில்...
கண்மூடிக் கண்திறந்தாய்!
நான் ரசித்திருக்கிறேன்!!!

பரிட்சை நேரத்தில்
"All the best" சொல்லிவிட்டு
அம்மாவின் குரலுக்கு
வேகமாக ஓடுவாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

தெருவில் நீ ஓடிச்செல்கையில்
என் வீட்டின் முன்புமட்டும்
மெதுவாக நடப்பாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

அம்மா..
நான் பள்ளிக்கூடம் போறேனென
என்னையும் கிளம்பவைப்பாயே..
நான் ரசித்திருக்கிறேன்!!!

கதவிடுக்கில் சிக்கி
காயம்பட்ட என் விரலுக்கு
கண்ணீர் சிந்துமே உன் மனது..
நான் ரசித்திருக்கிறேன்!!!

Transfer வாங்கிய உன் அப்பாவுடன்
வெளியூர் செல்கையில் - உன்
முகவரி தரத்தவித்தாயே..
நான் ரசித்திருக்கிறேன்!!!

பெயரொன்றும் எழுதாமல் - உன்
முகவரி மட்டுமெழுதி
கடிதம் அனுப்பினாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

முழுஆண்டு விடுமுறையில்
ஊருக்கு வருகையில்...
சிரித்துக்கொண்டே அழுதாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

Engineering try பண்ணி
B.Sc கிடைக்கையில்
இதுல நீ ஜெயிச்சிக்காட்டு என்றாயே...
நான் ரசித்திருக்கிறேன்!!!

நான் Hostel-க்குப் போனபோது
கலைந்துபோன கண்களுடன்
என்னைக் கரையவைத்தாயே..
நான் ரசித்திருக்கிறேன்!!!

எனக்கு டாட்டா காட்டுகையில்
பார்த்துவிட்டவர்களுக்காய்
கொசு விரட்டினாயே..
நான் ரசித்திருக்கிறேன்!!!

எப்போதும் உடனிருப்பேனென
தலைசாய்த்துத் தோள்சாய்வாய்..
நான் ரசித்திருக்கிறேன்!!!

துயர்வரும் பொழுதுகளில்
துணையிருப்பேனென சொல்லி
கரம் தாங்கி விரல் கோர்ப்பாய்..
நான் ரசித்திருக்கிறேன்!!!

துணிவோடிருக்கும் பொழுதினில்
துயர்சேர்த்துப் பிரிந்துசென்றாய்...
நான் ரசிக்க இயலா நிலையிலும்
எனை ரசித்துக் கடந்து சென்றாய்..
எப்போதும் அவசரம்தானடி உனக்கு..
பிறக்கவும் அவசரப்பட்டாய்..
பிள்ளைப்பேறுக்கும் அவசரப்பட்டாய்..
உரக்க சிரித்தே பார்த்திருந்த உன்னை
இறக்கப் பார்க்கும் கொடுமையை
ஏன் தந்தாய் இறைவா???
என்றும் போல் இன்றும்...
கடந்தகால நினைவலைகளில்
உன் நினைவுகளை
ரசித்திருக்கிறேன்!!!